மாயோன்




உண்மை யறிந்தவர் உன்னைக் கணிப்பாரோ?
மாயையே-மனத் திண்மையுள்ளாரை நீ செய்வது
மொன்றுண்டோ !-மாயையே!

எத்தனை கோடி படைகொண்டு வந்தாலும்
மாயையே-நீ
சித்தத் தெளிவெனுந் தீயின்முன்
நிற்பாயோ?-மாயையே!

என்னைக் கெடுப்பதற் கெண்ணமுற்றாய்
கெட்ட மாயையே!-நான்
உன்னைக் கெடுப்ப துறுதியென்
றேயுணர்-மாயையே!

சாகத் துணியிற் சமுத்திர மெம்மட்டு
மாயையே!-இந்தத்
தேகம் பொய் யென்றுணார் தீரரை யென்
செய்வாய்!-மாயையே!

இருமை யழிந்தபின் எங்கிருப்பாய்,அற்ப
மாயையே!-தெளிந்
தொருமை கண்டார் முன்னம் ஓடாது
நிற்பையோ?-மாயையே!

நீதரும் இன்பத்தை நேரென்று கொள்வனோ
மாயையே-சிங்கம்
நாய்தரக் கொள்ளுமோ நல்லர
சாட்சியை-மாயையே!

என்னிச்சை கொண்டுனை யெற்றி விட
வல்லேன் மாயையே!-இனி
உன்னிச்சை கொண்டெனக் கொன்றும்
வராது காண்-மாயையே!

யார்க்கும் குடியல்லேன் யானென்ப
தோர்ந்தனன் மாயையே!-உன்றன்
போர்க்கஞ்சு வேனோ பொடியாக்குவேன்
உன்னை-மாயையே!

- மஹாகவி பாரதியார்

தன்னை அழிக்க நினைக்கும் நிலையற்ற மாயையை பார்த்து பாரதி :

உண்மை யறிந்தவர் உன்னைக் கணிப்பாரோ?
மாயையே-மனத் திண்மையுள்ளாரை நீ செய்வது
மொன்றுண்டோ !-மாயையே!

இருப்பது போலே தோன்றி இல்லாமல் மறையும் மாயையே,
ஞான அறிவுடையோர் உன்னை மதிப்பாரோ? மனதில் உறுதி உடையவரை கலக்கமுறச் செய்யும் வகையில் நீ செய்யக்கூடிய செயல்கள் ஏதேனும் உள்ளதா?

எத்தனை கோடி படைகொண்டு வந்தாலும்
மாயையே-நீ
சித்தத் தெளிவெனுந் தீயின்முன்
நிற்பாயோ?-மாயையே!

என்னை அழிக்க நீ எத்துணை ஆயிரமாயிரம் படைகள் கொண்டு வருவாயோ? தெளிவான எண்ணங்கள் கொண்ட என் மனதில் இருக்கும் அறிவுத் தீயின் முன்னே நீ தாக்கு பிடித்து நிற்பாயோ அற்ப மாயையே.

என்னைக் கெடுப்பதற் கெண்ணமுற்றாய்
கெட்ட மாயையே!-நான்
உன்னைக் கெடுப்ப துறுதியென்
றேயுணர்-மாயையே!

என்னை அழித்து ஒழிக்கவே எண்ணம் கொண்டாய் அசுர மாயையே, நான் உன்னை ஒழித்து அழிப்பதென்று உறுதி கொண்டிருப்பதை நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை மூட மாயையே.

சாகத் துணியிற் சமுத்திர மெம்மட்டு
மாயையே!-இந்தத்
தேகம் பொய் யென்றுணார் தீரரை யென்
செய்வாய்!-மாயையே!

தன் உயிரையே துச்சம் (மதிப்பற்றதென்று) என்று இழக்கத் துணிந்தவனுக்கு கடலின் (சமுத்திரம்) ஆழமும், நீளமும் என்ன செய்து விடும்? இந்த உடலே (தேகம்) பொய்யானது என தெளிவான ஞானம் உடைய வீரனை (தீரன்) என்ன செய்துவிட முடியும் கோழை மாயையே.!!

இருமை யழிந்தபின் எங்கிருப்பாய்,அற்ப
மாயையே!-தெளிந்
தொருமை கண்டார் முன்னம் ஓடாது
நிற்பையோ?-மாயையே!

மூட நம்பிக்கைகளும், அறிவில்லா மூடர்களும் இருளாய் பறந்து விரிந்திருக்கும் வரை நீ இருப்பாய். அவை ஒழிந்த பிறகு ஓடி ஒளிவாய் மாயையே? எல்லா உண்மைகளும் அறிந்து ஒற்றுமையாய் ஒன்றென நிற்கும் அறிவுடையோரை (மக்கள்) கண்டால் ஓட்டம் பிடிப்பாயோ? இல்லை அப்படியே நிற்பாயோ?

நீதரும் இன்பத்தை நேரென்று கொள்வனோ
மாயையே-சிங்கம்
நாய்தரக் கொள்ளுமோ நல்லர
சாட்சியை-மாயையே!

நீ தரும் பொய்யான இன்பங்களை பெரிதென்று நம்பி ஏற்று மகிழ்வேன் என நினைத்தாயோ? காட்டில் சிங்கம் தரக்கூடிய வீரமும், அறிவும் மிகுந்த நல் ஆட்சியை நாய் தந்து விடுமோ என்ன? அறிவில்லா மாயையே.

என்னிச்சை கொண்டுனை யெற்றி விட
வல்லேன் மாயையே!-இனி
உன்னிச்சை கொண்டெனக் கொன்றும்
வராது காண்-மாயையே!

நான் கொண்டுள்ள ஆசைகளையும், சக்திகளையும் கொண்டே உன்னை எட்டி உதைக்கும் வல்லமை கொண்டவன் என்பதை அறியாமல் போனாயே அற்ப மாயையே, ஆதலால் நீ கொண்ட சக்திகளாலும், யுக்திகளினாலும் எமக்கு ஒன்றும் நேராது. காத்திருந்து பார் என்னுடைய சக்தியை.

யார்க்கும் குடியல்லேன் யானென்ப
தோர்ந்தனன் மாயையே!-உன்றன்
போர்க்கஞ்சு வேனோ பொடியாக்குவேன்
உன்னை-மாயையே!

எவனுக்கும் அடிமையில்லை என்பதை உணர்ந்தவன் நான். நீ என் மீது தொடுத்து வரும் போருக்கு பயப்படுவேன் என்று நினைத்தாயோ? உன்னை அழித்து பொடிப் பொடியாய் சாம்பல் ஆக்குவேன். இன்னும் மீதம் தைரியமிருந்தால் எம்மிடம் தாக்கு பார்ப்போம்.

- அஜய் ரிஹான்

கருத்துகள்

  1. Mayai than nammai aati veikirathu... Irul neeki gnana ozhi pera vendum...
    Barathi endrum mayayil agapadathavan...avanai pola manitharaium mayayin kan serathu, avan padalgal moolam ozhi tarugiran.... Mayai... Anaivaraium satru aati veipaval.... Avalai unarthu telinthal anaithaium vellalam...
    Unathu telivuraium arumai....

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக